search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்"

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் குமார் தாகூரை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கி திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அதிரடியாக உத்தரவிட்டார். #KendraVidyalaya
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கனந்தம்பூண்டியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு 950 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் முதல்வராக இருந்த சீனிவாசன் என்பவர் திருச்சிக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

    அவருக்கு பதிலாக பெங்களூர் பள்ளி முதல்வராக இருந்த பீகாரைச் சேர்ந்த குமார் தாகூர் என்பவர் திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    இவர் பெங்களூரில் பணியில் இருந்த போது மாணவிகளை மிகவும் ஆபாசமாக பேசியது மற்றும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இவர் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது மாநிலத்தில் முதல் 10 இடங்களுக்குள் பெங்களூர் பள்ளியை கொண்டு வர கடுமையாக உழைத்தாக நிர்வாகத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து குமார் தாகூரை திருவண்ணாமலை பள்ளி முதல்வராக பணியிட மாற்றம் செய்தனர். அவர் கடந்த மாதம் 13-ந்தேதி பள்ளி முதல்வராக பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான குமார் தாகூர் திருவண்ணாமலை பள்ளி முதல்வராக மாற்றப்பட்டார் என்று சமூக வலை தளங்களில் தகவல் பரவியது.

    இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், குற்றவழக்கில் தொடர்புடையவரை மாற்ற வேண்டும் என்று பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தண்டராம்பட்டு போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் அவர்கள் இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைவராக உள்ள கலெக்டர் கந்தசாமிக்கு வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து முதல்வர் பொறுப்பில் இருந்து குமார் தாகூரை நீக்கி கலெக்டர் கந்தசாமி அதிரடியாக உத்தரவிட்டார். குமார் தாகூர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  #KendraVidyalaya



    ×